அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர், பதிவாளர் வீடு முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம்! (படங்கள்)


பொங்கல் பண்டிகையான ஜன.14-ம் தேதி திங்கள்கிழமை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் இல்லத்தின் முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் நடத்தினர்.
பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து ஊழியர்களுக்கு தர வேண்டிய ஈட்டிய விடுப்பு சமர்பிப்புத்தொகை, ஊழியர்களின் சேமநலநிதியிலிருந்து கடன் தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகை,
பொங்கல் போனஸ் மற்றும் இயல்பாக கிடைக்க வேண்டிய சலுகைகள் போன்றவற்றை தராமல் மறுத்து வருகிறது. இதனால் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கரும்பொங்கலாக மாறிவிட்டது. எனவே இதனை அரசு கவனத்தில் ஈர்க்கும் வகையில் ஜன.14-ம் தேதி பொங்கல் தினமான திங்கள்கிழமை துணைவேந்தர் வீடு மற்றும் பதிவாளர் வீடு முன்பு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை நடத்தினர்.
போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்பேராசிரியர் உதயசந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், பல்கலைக்கழக பணியாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கிள்ளைரவீந்திரன் உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள், ஊழியர்கள் குடும்பத்தினருடன் வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தை முன்னிட்டு துணைவேந்தர் பாதுகாப்பு கோரி காவல்துறையினருக்கு புகார் அளித்திருந்ததால், துணைவேந்தர் மற்றும் பதிவாளர் வீடு முன்பு ஏஎஸ்பி எம்.துரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட வந்த ஆசிரியர்கள், ஊழியர்களிடம் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி கிடையாது என தெரிவித்தும், அதை மீறி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
பின்னர் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதியளித்ததை அடுத்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வீடுகள் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மிகப்பெரிய பாத்திரங்களை வைத்து தீ முட்டிகஞ்சி காய்ச்சி குடித்தனர். மேலும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment